Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 20 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும் 30ம் தேதி துவங்குகிறது. எனவே, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தி வருவதோடு, தி.மு.க., சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகின்றார்.
புதுச்சேரியில், ஏப்ரல் 9ல் தேர்தல் நடப்பதால், முதலில், அம்மாநிலத்தில் இருந்து விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
நேற்று 3ஆம் நாளாக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்ட தொகுதிகளுக்கு, வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் பாலு, முதன்மை செயலர் நேரு, அமைப்பு செயலர் பாரதி மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு நாளும் 9 மணி நேரத்திற்கும் மேலாக நேர்காணல் நடத்தி, ஆயிரக்கணக்கான உடன்பிறப்புகளைச் சந்திப்பதே எனது உற்சாகத்தை அதிகரித்துள்ளது.
நமது திராவிட மாடல் ஆட்சியில் தங்கள் தொகுதி அடைந்திருக்கும் வளர்ச்சி பற்றியும், நம் சாதனைத் திட்டங்களுக்கு இருக்கும் வரவேற்பு பற்றியும் ஒவ்வொருவரும் மிகுந்த நம்பிக்கையுடன் விவரிக்கின்றனர்.
நேர்காணலுக்கு வரும் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, நீங்களும் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்… உங்கள் கருத்துகளில் இருந்து கிடைக்கும் நுண்ணறிவு, திராவிட மாடல் 2.0-வுக்கு அடித்தளமாகட்டும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b