Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 20 மார்ச் (ஹி.ச.)
திமுக ஆட்சியில் கொடூர மிருகங்கள்
சுதந்திரமாக நடமாடுவதாகவும் பெண்களுக்கு தான்
பாதுகாப்பில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அன்புமணி, இது நாடா இல்லை காடா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான அவரது அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தையடுத்த வேடநத்தத்தில் 12&ஆம் வகுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில்,
ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை
அளிப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு
தொடர்பாக அடுக்கடுக்கான வினாக்களைத் தான் எழுப்பியிருக்கிறது.
வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 9
நாள்களுக்கு வரை அந்த வழக்கில் எந்த துப்பும் துலங்காத நிலையில், தர்ம
முனீஸ்வரன் என்ற கொடிய பின்னணி கொண்ட குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது
செய்துள்ளனர். தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே இரு வெவ்வேறு நிகழ்வுகளில் மூதாட்டிகளை
பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவன் என்றும், அவர்களிடம் நகைகளை
கொள்ளையடித்தவன் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்து 9
நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட
முயற்சிகள் கடுமையானவை, அதிக அர்ப்பணிப்புத் தன்மை கொண்டவை என்றாலும் கூட
காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பாராட்டத் தக்கவையாக இல்லை. மாறாக,
இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுப்பவையாகவே உள்ளன.
மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில்
அடைக்கப்பட்டிருந்த தர்ம முனீஸ்வரன் பிணையில் வெளிவந்திருந்ததாகவும், தினமும்
தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும்
கூறப்படுகிறது. தர்ம முனீஸ்வரன் போன்ற கொடிய குற்றவாளிகள் பிணையில்
விடுவிக்கப்படும் போது, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது
காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஆகும். ஆனால், தூத்துக்குடி
காவல்துறை இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது.
அதுமட்டுமின்றி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தர்ம முனீஸ்வரன் திருடப்பட்ட
இரு சக்கர ஊர்தியில் தான் அப்பகுதியில் வலம் வந்ததாகவும், அதை வைத்து தான்
அவனை கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பல நாள்களாகவே
திருடப்பட்ட இரு சக்கர ஊர்தியை தர்ம முனீஸ்வரன் பயன்படுத்தி வந்துள்ள
நிலையில், அதைக் கண்டுபிடித்திருந்தால் கூட அவனால் மாணவி சீரழிக்கப்பட்டதை
தடுத்திருக்க முடியும். ஆனால், அந்த வகையிலும் தமிழ்நாடு காவல்துறை படுதோல்வி
அடைந்து விட்டது.
வேடநத்தம் மாணவி விவகாரத்தில் மட்டுமின்றி, கோவை விமானநிலையத்தின் பின்புறம்
கல்லூரி மாணவி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு
உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், குணா ஆகிய
மூவரும் இதேபோன்று கொடூரமான பின்னணி கொண்டவர்கள் தான். பல்வேறு கொலை, கொள்ளை,
திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அவர்கள், திருட்டு வழக்கில் பிணையில்
வெளிவந்த போது தான் கோவை மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிகழ்விலும் பழைய குற்றவாளிகளை காவல்துறையினர் கண்காணித்திருந்தால்
கூட்டுப் பாலியல் வன்கொடுமையைத் தடுத்திருக்க முடியும். ஆனால், வழக்கம் போலவே
இதிலும் காவல்துறைக்கு தோல்வி தான்.
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே கடந்த 9&ஆம் தேதி 14 வயது சிறுமி இரு மனித
மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவ்வழக்கில்
கைதான காக்கா பாலாஜி என்பவன் கொடூர பின்னணி கொண்டவன் என்பதும், அவன் மீது பல
வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காக்கா
பாலாஜியையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தால் மாணவிக்கு கூட்டுப்
பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்காது. அதைத் தடுக்கத் தவறியதும் காவல்துறை
தோல்வி தான்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்தக் கொடிய நிகழ்வுகளையும், அந்த வழக்குகளில்
காவல்துறை காட்டிய அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும் போது ஒரு விஷயம்
தெளிவாகிறது. மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும்
எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். அவர்களை
கண்காணிக்கவோ, அவர்கள் மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத்
தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சுதந்திரமாக
நடமாட வேண்டிய பெண்களும், குழந்தைகளும் தான் சுதந்திர நாட்டில் தங்களுக்கு
என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது.
நாட்டுக்கும், காட்டுக்குமான அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், நாட்டில்
விலங்குகள் கட்டிப் போடப் பட்டிருக்கும்; மனிதர்கள் சுதந்திரமாக நடமாடுவர்,
காட்டில் விலங்குகள் சுதந்திரமாக நடைபோடும்; மனிதர்கள் அஞ்சி அஞ்சி நடமாடுவர்
என்பது தான். திமுக ஆட்சியில் மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும் போது,
மக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அஞ்சி நடமாட வேண்டியிருந்தால், இது
நாடா அல்லது காடா?
‘‘பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’’ என்று பாரதியார்
கூறியதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் தான் தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கு
சூழல் சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றால் அது தற்போது
நடைபெற்று வரும் திமுக ஆட்சி தான். எத்தகைய சாபமாக இருந்தாலும் அதற்கு ஒரு
விமோசனம் இருக்கும். அதேபோல், தமிழ்நாட்டிற்கான சாபவிமோசனம் வரும் ஏப்ரல்
23&ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான்.
அந்தத் தேர்தலில்
பாட்டாளி மக்கள் கட்சி & அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள்
வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அப்போது
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று
தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam