Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 21 மார்ச் (ஹி.ச.)
கடந்த மார்ச் 15 அன்று, ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இதனிடையே, வருகின்ற மார்ச் 30 முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்க உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப்பொருட்களை வழங்குவதைத் தடுப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது.
அதற்காக, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, இரவு பகல் என 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனைகளில் இதுவரையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட 40 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை மாதாவரத்தில் காரில் கொண்டு செல்லப்பட்ட 40 வைரக் கற்களைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
உரிய ஆவணங்கள் இன்றி இந்த வைரக் கற்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b