Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.)
டெல்லியில், அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி முஸ்லிம் சமூகத் தலைவர்கள் இன்று ஈத்-உல்-பித்ர் பண்டிகையையொட்டி ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
உலக நலன் கருதி அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவ வேண்டி பிரார்த்தித்த அவர்கள், நாட்டினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத் தெரு மசூதியில் தொழுகைக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஆதிப்,
கடந்த 30 நாட்களாக நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோரி அல்லாஹ்வை வேண்டி வந்தோம். அந்த ஆன்மீகப் பயணத்தின் நிறைவாக இன்றைய நாளை கொண்டாடுகிறோம்.
ரம்ஜான் மாதம் ஆன்ம சுத்திகரிப்புக்கும் அன்பு, கருணை போன்ற மனிதநேயப் பண்புகளைப் பரப்புவதற்கும் வழிவகுக்கிறது. இது மகிழ்ச்சி மிகுந்த நாள்.
என்றார்.
பாஜகவின் தேசிய ஊடகப் பொறுப்பாளர் யாசர் ஜிலானியும் அதே மசூதியில் தொழுகையில் பங்கேற்று, ஈத் நாளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் ஈத் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, பஞ்ச்குயியன் சாலையில் அமைந்துள்ள இமாமியா ஹால் மசூதியில் நடைபெற்ற தொழுகையில் பொதுமக்களுடன் கலந்து கொண்டார்.
முஸ்லிம் நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரம்ஜான், இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான காலமாகக் கருதப்படுகிறது.
இந்த மாதத்தில்தான் திருக்குர்ஆன் முதன்முதலாக வெளிப்படுத்தப்பட்டது என்பது நம்பிக்கையாகும்.
Hindusthan Samachar / JANAKI RAM