Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 21 மார்ச் (ஹி.ச.)
தமிழகம் முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கொண்டாட்டங்களில் இஸ்லாமியர்கள் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும், மதநல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழுகையில் ஈடுபட்டனர்.
தொழுகை முடிந்து வெளியேறி வந்ததும் முஸ்லிம்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
அதற்கு முன்னதாக நோன்பு திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் பல்வேறு பொருள்கள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையொட்டி பள்ளி வாசல்களில் பல்வேறு வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதேபோல் இந்த மாவட்டத்தில் பூந்தமல்லி, திருமழிசை, வெள்ளாத்துகோட்டை, ஊத்துக்கோட்டை, வேப்பம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதி பள்ளி வாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Hindusthan Samachar / vidya.b