Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 21 மார்ச் (ஹி.ச.)
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சருல் திருவிழாவை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சி நோக்கில் நாட்டின் முன்னேற்றம் அமைய வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இன்று வெளியிட்டுள்ள தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், அனைத்து குடிமக்களுக்கும்—குறிப்பாக பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கும்—மனமார்ந்த சருல் பண்டிகை நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் மரங்களில் புதிய மலர்கள் மலரும் காலத்தை ஒட்டி கொண்டாடப்படும் இந்த விழா, புத்துணர்ச்சியையும் புதிய தொடக்கங்களையும் குறிக்கிறது.
மேலும், பழங்குடியின மக்களின் ஒற்றுமை உணர்வையும், இயற்கையுடனான அவர்களின் ஆழமான பிணைப்பையும் இந்த விழா பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்நன்னாளில், இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேறுவோம் என்ற உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் அழைப்புவிட்டார்.
பழங்குடியின மக்களின் முக்கியமான திருவிழாவாகக் கருதப்படும் சருல், ஜார்க்கண்ட் முழுவதும் இன்று உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது.
அறுவடைத் திருவிழாவான இது, பைசாகி, ஓணம், பொங்கல் போன்ற திருநாள்களுக்கு இணையாகக் கருதப்படுகிறது. சித்திரை மாதத்தின் மூன்றாம் நாளில் மாநிலத்தின் பல்வேறு பழங்குடியினக் குழுக்களால் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், கிராமத்தின் காவல் தெய்வம் உறைவதாக நம்பப்படும் ‘சரணாஸ்தல்’ அல்லது ‘ஜாஹர்’ எனப்படும் புனித இடத்தில் உள்ள சால் மரத்தின் கீழ் சடங்குகள் நடத்தப்படுகின்றன.
சால் மரம், விறகும் தங்குமிடமும் வழங்குவதோடு, கடுமையான வானிலையிலிருந்து பாதுகாப்பதாலும், இந்த சடங்குகளில் புனித முக்கியத்துவம் பெறுகிறது.
விழா நாளில், புதிய பயிர்கள், பழங்கள், மலர்கள் ஆகியவை தெய்வங்களுக்கு படைக்கப்பட்டு, பின்னர் அவை மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. நண்பகலுக்கு முன் பூஜை மற்றும் சடங்குகள் நடைபெறுகின்றன.
அதன் பின்னர், மக்கள் ‘டோல்’, ‘நாகடா’, ‘துர்ஹி’ போன்ற பாரம்பரிய இசைக்கருவிகளின் ஒலியில் பாடி ஆடுகின்றனர்.
பின்னர், இந்தப் படைப்பொருட்கள் ‘ஹாண்டியா’ என அழைக்கப்படும் பாரம்பரிய அரிசி மதுவுடன் சேர்த்து, கிராம மக்களால் பிரசாதமாக உட்கொள்ளப்படுகின்றன.
Hindusthan Samachar / JANAKI RAM