Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 22 மார்ச் (ஹி.ச.)
சென்னை, கிண்டி குழந்தைகள் பூங்காவில் சென்ற சில தினங்களாகப் பறவைகள் மர்மமான விதத்தில் இறந்து வந்தன.
இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பூங்காவில் உள்ள பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன் விளைவாக, பொதுமக்களின் நலன் கருதி குழந்தைகள் பூங்கா மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறியது:-
பறவைக் காய்ச்சல் தொற்று 99.9% மனிதர்களுக்குப் பரவுவதற்கு வாய்ப்பில்லை. ஆகையால், பொதுமக்கள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகளை வெறுங்கையால் தொடக்கூடாது. காகங்கள், புறாக்கள் அதிக எண்ணிக்கையில் இறந்து கிடந்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பறவை இறந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது இருக்கிறதா எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் மாமிசக் கழிவுகளை வெளியில் கொட்டக்கூடாது. இது மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நோய் பரவுவதற்கு காரணமாக அமையலாம்.
இறைச்சிக் கடைகள் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை கிருமிநாசினி தெளித்துச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேகவைத்துச் சாப்பிடுவது பாதுகாப்பானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM