Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 22 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் சுற்றுவட்டாரப்பகுதிகளான சீக்கனாங்குப்பம், முகையூர், வடபட்டினம், தென்பட்டினம் மற்றும் இடைக்கழிநாடு போன்ற பகுதிகளில் மா, பலா, பனை, தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோடை காலம் துவங்கி, பகலில் காலை 11.00 மணி முதல் 3.00 மணி வரை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், பொதுமக்கள் உடற்சூட்டைத் தணிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை உண்பது வழக்கம்.
அதற்கு ஏற்றபோல கோடை காலத்தில் நுங்கு, தர்பூசணி போன்றவை இப்பகுதியில் அதிக அளவில் கிடைக்கும்.
இப்பகுதியில் விளையும் நுங்கு, இளநீர் மற்றும் பதநீர் ஆகியவை, செய்யூர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் குடில்கள் அமைத்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
நுங்கு 30 முதல் 50 ரூபாயும், இளநீர் 40 முதல் 60 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகின்றன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் செல்லும் மக்கள் ஆர்வத்துடன், வாங்கி செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b