Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 22 மார்ச் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது, அதேபோன்று அருணாசலேஸ்வரர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நாயகருக்கு சிவாச்சாரியர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர், இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தற்போது சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராஜகோபுரம் வழியாக இலவச தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், அதேபோல் 50 ரூபாய் தரிசன கட்டணத்தில் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக வரக்கூடிய பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் வருகின்ற பக்தர்களின் வசதிக்காக குடிதண்ணீர் நீர்மோர் உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர், சாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சனம் கோபுரம் வழியாக வெளியே செல்லும் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட மலையே சிவனாக எண்ணி அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN