Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 23 மார்ச் (ஹி.ச.)
மேற்காசிய போர் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அவர் தனது உரையில் பேசியதாவது,
மேற்காசிய போர் உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தை பாதித்துள்ளது. பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
போர் பாதிப்பு பகுதியில் வாழும் இந்தியர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. மேற்காசிய சூழலை இந்தியா திறம்பட சமாளித்து வருகிறது. போருக்குப் பிறகு 3.75 லட்சம் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பி உள்ளனர். ஈரானில் இருந்து ஆயிரம் பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் ஒரு கோடி இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். போர் காரணமாக சிலர் உயிரிழந்துள்ளனர்.மேற்கு ஆசியாவில் இருந்து தான் நமது கச்சா எண்ணெய் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பல சிக்கல்களுக்கு இடையே எரிபொருள் இறக்குமதி செய்து வருகிறோம். வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு தேவையான எரிவாயு, கச்சா எண்ணெய் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகிறது. இந்தியா வரும் எரிபொருள் கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமக்கு எரிபொருள் வரும் அனைத்து கடல் வழி பாதைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தது. மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கிறது. பெட்ரோலுடன் தற்போது 20% எத்தனால் கலக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
53 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எரிபொருள் நமது கிடங்கில் இருப்பில் உள்ளது. போர் சூழலில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியர்கள் வசித்து வரும் நாடுகளின் தலைவர்களுடன் பேசி உள்ளேன். இந்தியர்களுக்கு தூதரகம் மூலம் தேவையான அறிவுரைகள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டது.
போரால் ஏற்படும் தாக்கங்களை மத்திய அமைச்சர்கள் குழு கூடி ஆலோசனை எடுத்து வருகிறது. அமைச்சர்கள் குழு தரும் பரிந்துரைக்கு ஏற்ப தினமும் முடிவு எடுக்கப்படுகின்றன.
பாதிப்புகளை குறைக்க அரசு முடிந்த அளவு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் சாகுபடி காலத்துக்கான உரம் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரயில்களை மின்சாரம் மூலம் இயக்குவதால் டீசல் பயன்பாடு குறைந்துள்ளது. மின்சார வாகன பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவின் எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேற்காசியா எரிபொருள் கொள்முதலில் முக்கிய இடம்பெறுகிறது. பொருளாதாரத்தின் முதுகெலும்பு எரிபொருள். தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்தியாவின் வருங்காலம் பாதுகாப்பானதாக இருக்கும்.
வளைகுடா நாடுகளில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை
மாணவர்களின் கல்வி தடையின்றித் தொடர்வதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தப் போர்ச் சூழலிலும், ராஜதந்திரத்தின் மூலம் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Hindusthan Samachar / vidya.b