Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 மார்ச் (ஹி.ச)
தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டம் தேர்தலுக்கு முன் நடைபெறும் முக்கியமான ஆலோசனை கூட்டமாக இருந்தது.
இதில் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்து, தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
விருப்ப மனுக்கள் அளித்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மனுக்கள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளதாகவும், பெயர் வராதவர்களுக்கு அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், கட்சி அமைத்துள்ள கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி தேர்தலில் தேமுதிக கண்டிப்பாக போட்டியிடும் என்றும், இன்று மாலை 3 மணிக்குள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியிலேயே புதுச்சேரி தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என்றும் அவர் கூறினார்.
தேமுதிக குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருவதாகவும், அவை எதுவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்ல என்றும் அவர் விளக்கமளித்தார்.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இன்னும் 4 முதல் 5 நாட்களில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் சீட் விட்டுக் கொடுத்தால் தேமுதிகவும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், கட்சி மீது லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என்றும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றுவது தேமுதிக தான் என்றும், மாவட்ட செயலாளர்கள் உற்சாகத்துடன் தேர்தலை எதிர் கொள்ள தயாராக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ