Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
சென்னை மயிலாப்பூரில் உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் மார்ச் 23ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை பங்குனி பெருவிழா நடைபெறுகிறது.
இதன் பகுதியாக மார்ச் 25ஆம் தேதி காலை 6 மணிக்கு அதிகாரநந்தி திருவிழா, மார்ச் 29ஆம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் மற்றும் மார்ச் 30ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு அறுபத்துமூவர் உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால், தேவையான நேரங்களில் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழா நடைபெறும் நாட்களில் கோயிலைச் சுற்றியுள்ள சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, வடக்கு மாடவீதி, நடுத்தெரு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் வாகனங்கள் கோயில் நோக்கி அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும் ஆர்.கே.மடம் சாலை, லஸ் சந்திப்பு, கச்சேரி சாலை, தேவடி தெரு, சித்ரகுளம், சுந்தரேஸ்வரர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.
அடையார் – லஸ் சந்திப்பு, இராயப்பேட்டை – லஸ் சந்திப்பு மற்றும் ஆழ்வார்பேட்டை வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் கோயில் குளம் அருகிலிருந்த மாநகர பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் நிறுவனம் அருகே மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் மார்ச் 25, 29 மற்றும் 30 ஆகிய முக்கிய விழா நாட்களில் சன்னதி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாடவீதிகள், ஆர்.கே.மடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்காக லஸ் சர்ச் ரோடு, சாய்பாபா கோயில் அருகில், பி.எஸ். பள்ளி அருகில் உள்ள கோயில் மைதானம் உள்ளிட்ட இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ