Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 மார்ச் (ஹி.ச.)
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சி இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றது.
இதில் மாம்பழம் சின்னம் விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மாம்பழம் சின்னம், பாமக பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது.
கூடுதலாக, அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரிரு நாட்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்துவைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 24) முறையீடு செய்யப்பட்டது.
இதனை மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறிய நீதிபதி எம்.தர்மபிரபு, அப்படி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.
இதனிடையே, இன்று பிற்பகல் மனுவாக தாக்கல் செய்யப்படும் என ராமதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b