Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர், 24 மார்ச் (ஹி.ச.)
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
அந்த வகையில்,தமிழகத்தின் வடக்கு எல்லையில் ஆந்திராவை யொட்டி அமைந்துள்ளது திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி.
மாநில தலைநகர் சென்னையையொட்டி அமைந்துள்ள முக்கிய தொகுதியாகவும் இது திகழ்கிறது.
திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி மற்றும் திருத்தணி வட்டத்தின் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் இந்த தொகுதியில் அடங்கி உள்ளன
திருவள்ளூர் தொகுதியில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர்.
விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட தொகுதிகளில் திருவள்ளூரும் ஒன்று.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது.
இத்துடன் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 108 வைணவ தலங்களில் ஒன்றாக திகழும் வீரராகவ பெருமாள் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் ஆகியவை தொகுதியின் முக்கிய அடையாளமாக உள்ளன.
திருவள்ளூர் நகராட்சி மற்றும், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியாகும்.
திருவள்ளூர், கடம்பத்தூர், திருவாலங்காடு, பூண்டி ஆகிய ஒன்றிய பகுதிகள் உள்ளன.
ஒரே ஒரு நகராட்சியான திருவள்ளூர் நகராட்சியில் இது அடங்கி இருக்கிறது.
திருவள்ளூர், திருத்தணி ஆகிய 2 வட்ட பகுதிகளும் இந்த தொகுதியில் இருக்கின்றன.
இதில் திருத்தணி வட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களும், திருவள்ளூர் வட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய கிராமங்களும் உள்ளன.
சென்னையையொட்டி உள்ள பகுதி என்பதால் இந்த தொகுதியில் உள்ள திருவள்ளூர் நகரம் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.
ஆனாலும் தொகுதியின் மற்ற பகுதிகள் இன்னும் பின் தங்கிய நிலையிலேயே இருப்பதாக தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மாணவ- மாணவிகள் வசதிக்காக திருவள்ளூரில் அரசு பொது மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புறவழிச்சாலை அமைக்க வேண்டும். பைபாஸ் சாலை அமைக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மேலும் ஏரி, குளங்களுக்கு வரும் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும், தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.
மாவட்ட தலைநகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய வகையில் திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பெரிய பஸ் நிலையம் அமைத்திட வேண்டும் என்பது பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
திருவள்ளூர் தொகுதியை பொறுத்தவரை அதிகபட்சமாக தி.மு.க.- அ.தி.மு.க. கட்சிகளே மாறி மாறி போட்டியிட்டுள்ளன.
1951 எம்.தர்மலிங்கம் (கே.எம்.பி.பி.)
1957 ஏகாம்பர முதலியார் (காங்கிரஸ்)
1962 அருணாசலம் (காங்கிரஸ்)
1967 துரைராசு (தி.மு.க.)
1971 துரைராசு (தி.மு.க.)
1977 பட்டாபிராமன் (அ.தி.மு.க.)
1980 பட்டாபிராமன் (அ.தி.மு.க.)
1984 பட்டாபிராமன் (அ.தி.மு.க.)
1989 முனிரத்தினம் (தி.மு.க.)
1991 சக்குபாய் தேவராசு (அ.தி.மு.க.)
1996 சுப்பிரமணியன் (தி.மு.க.)
2001 டி.சுதர்சனம் (த.மா.கா.)
2006 இ.எ. பி.சிவாஜி (தி.மு.க.)
2011 பி.வி.ரமணா (அ.தி.மு.க.)
2016 வி.ஜி. ராஜேந்திரன் (தி.மு.க.)
2021 வி. ஜி. ராஜேந்திரன்
தி.மு.க
2026 சட்டமன்றத் தேர்தலில் இதில் ஏதேனும் மாற்றங்கள் வருமா? என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J