Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 மார்ச் (ஹி.ச.)
ஈரானிலும் அதனை ஒட்டியுள்ள தீவுகளிலும் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை குறித்து அவசரமாக விவாதிக்க கோரி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இன்று மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மான அறிவிப்பில், சிக்கியுள்ள மீனவர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் அச்சநிலையை எதிர்கொண்டு வருவதாகக் கிடைக்கும் தகவல்களை அவர் சுட்டிக்காட்டினார்.
நிலைமை “மிகவும் மோசமானது” எனக் குறிப்பிட்ட அவர், உடனடி தலையீடு அவசியம் என வலியுறுத்தினார்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி, அவையின் வழக்கமான பணிகளை ஒத்திவைத்து அவசர விவாதம் நடத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.
அதில், சிக்கித் தவிக்கும் மீனவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்பது, அவர்களுக்கு உடனடி உணவு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவது, பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது, மேலும் அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப தூதரக மட்டத்தில் விரைவான நடவடிக்கைகளை தொடங்குவது ஆகியவை அடங்கும்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பும் நலனும் உறுதிசெய்ய அரசு எந்தவித தாமதமுமின்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM