Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச)
பாமக தலைவர் என தன்னை அறிவிக்கும் வரை கட்சியின் மாம்பழ சின்னத்தை பயன்படுத்துவதை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்று கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது மனுதாரர் தரப்பில், கட்சியின் தலைமை தொடர்பாக குழப்பம் நிலவி வருவதாகவும், அந்த நிலைமை தீரும் வரை மாம்பழ சின்னத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் நீதிமன்றம் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
மேலும், தன்னை பாமக தலைவர் என அன்புமணி ராமதாஸ் அறிவித்து வருவதாகவும், அது குறித்து சட்ட ரீதியான தீர்வு கிடைக்கும் வரை கட்சியின் சின்னம் பயன்படுத்தப்படுவது சரியல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள அன்புமணி ராமதாஸ் நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி தர்மபிரபு உத்தரவிட்டார்.
மேலும், நாளை இருதரப்பினரின் வாதங்களும் விரிவாக கேட்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
Hindusthan Samachar / P YUVARAJ