Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, கோயம்புத்தூர் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் பங்குனி உத்திர தேர்த் திருவிழா, பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் ஆன்மிக மரபாகும்.
இந்த ஆண்டு, பங்குனி உத்திரத் திருநாளை முன்னிட்டு, வரும் மார்ச் 29 அன்று தேர்த்திருவிழா நடைபெறவுள்ள நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரி, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து, தடை விதித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
ஆட்சி போகும் தருவாயிலும், பக்தர்கள் மனம் புண்படும்படி, நூற்றாண்டுகள் பழமையான பங்குனி உத்திர தேர்த்திருவிழாவைத் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது, சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
உடனடியாக தேரோட்டம் தடையின்றி நடைபெறத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b