Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 25 மார்ச் (ஹி.ச.)
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உளதால் சென்னையில் நடைபெறும் இரண்டு ஐ.பி.எ.ல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், டி.பிரபாகரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல் 4-ந்தேதி மற்றும் 15-ந்தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி நடந்தால், குறிப்பாக போலீசாருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே, வழக்கமான சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல் பணிகளுடன், தலைவர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களுக்கும் போலீசார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்த பணியுடன் இந்த கிரிக்கெட் போட்டிக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது போலீசாருக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, சென்னையில் ஏப்ரல் மாதம் 4 மற்றும் 15-ந்தேதி நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளை தேர்தலுக்கு பின் தள்ளி வைக்க வேண்டும். இது குறித்து, போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இரு போட்டிகளையும் திட்டமிடப்பட்ட தேதிகளில் நடத்த அனுமதித்தால், தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகளின் சின்னம், கொடிகளை போட்டி மைதானத்தில் காட்சிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யும்படி கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM