Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 69-வது தெருவை சேர்ந்தவர் சதீஷ் (45). இவர் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை அவர் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் பகுதியில் நடைபெற்ற உறவினர் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு சென்றிருந்தார்.
இரவு நிகழ்ச்சி முடிந்து குடும்பத்துடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த சுமார் 10 சவரன் தங்க நகைகள் (சுமார் 11 லட்சம் ரூபாய் மதிப்பு) மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக சதீஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கவனித்து திட்டமிட்டு இந்த கொள்ளை நடைபெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் வில்லிவாக்கம் பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ