Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 26 மார்ச் (ஹி.ச.)
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 978 இடங்களில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 19,594 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 16 மையங்களில் மார்ச் 28-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
பெரம்பூர் தொகுதிக்கு வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியிலும், கொளத்தூர் தொகுதிக்கு பந்தர் கார்டன் சென்னை உயர்நிலைப் பள்ளியிலும், ராயபுரம் தொகுதிக்கு மேற்கு மாதா சர்ச் சாலையில் உள்ள புனித பீட்டர் உயர்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அனைத்து தொகுதிகளின் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் பயிற்சி வகுப்புக்கான ஆணைகள் நேரடியாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் அவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b