Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 மார்ச் (ஹி.ச)
சமீபத்தில், ஊட்டி கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில், ஊசிமலை காட்சி முனை சுற்றுலா பகுதியில், தடை செய்யப்பட்ட பகுதியில் 'செல்பி' எடுக்க முயற்சித்த போது, நிலை தடுமாறி, 150 அடி உள்ளத்தில் தவறி விழுந்தார்.
அவரை, ராணுவம், வனத்துறை, தீயணைப்புதுறை என பல துறைகள் இணைந்து, சுமார் 12 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்டனர்.
இதுபோன்ற ஒரு சம்பவம் வேறெங்கும் நடந்து விடக்கூடாது என்பதில், வனத்துறையினர் மிகவும் கவனமாக உள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், கல்லாறு, பர்லியாறு, குஞ்சப்பனை உட்பட பகுதிகளில் உயரமான மலைப்பகுதிகள் உள்ளன. குஞ்சப்பனையில், காட்சி முனையில் இருந்து பார்த்தால், மேட்டுப்பாளையம் பவானி ஆறு, பவானிசாகர் அணை, அடர்ந்த வனம் என, இயற்கையை ரசிக்கலாம்.
மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகளில், யாரும் அத்துமீறி உள்ளே செல்லக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறியதாவது:
தற்போது கோடைகாலம் என்பதால், வனப்பகுதியில் தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள், பீடி, சிகரெட் புகைக்கக் கூடாது. வனப்பகுதி சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. 'செல்பி' மோகத்தில் அத்துமீறி வனப்பகுதிக்கு உள்ளே செல்வது, 'ரீல்ஸ்' எடுப்பது, அதை சமூக தளங்களில் வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிகளில் தொடர்ந்து ரோந்து சென்று வருகின்றனர்.
யாராவது அத்துமீறி வனப்பகுதிக்குள் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதிப்பதோடு, வனச்சட்டத்தின் படி தண்டனையும் விதிக்கப்படும்.
இதுகுறித்து, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குஞ்சப்பனை காட்சி முனையில் வனத்துறையினர் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள், காட்சி முனைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b