Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 மார்ச் (ஹி.ச.)
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மயிலத்தில் மலைக் குன்றின் மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி உற்சவ திருவிழா தேரோட்டத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் 3ஆம் நாளான வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விநாயகர் மற்றும் வீரபாகு ஆகியோருக்கு வெள்ளிக் கவசமும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் மற்றும் தங்க காசு மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வெள்ளி பூத வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN