Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
தமிழ் திரையுலகில் ரசிக்கும்படியான ஹிட் பாடல்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா.
தனது தனித்துவமான இசைக்காக கொண்டாடப்படும் அவர் தமிழ் திரையுலகின் இசையுலகில் புத்துயிர் ஊட்டியதாக பாராட்டப்படுகிறார்.
அவரது இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதுடன், திரையரங்குகளுக்கு ரசிகர்களை ஈர்க்கும் முக்கிய அம்சமாகவும் உள்ளது.
சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இன்னும் பல நம்பிக்கைக்குரிய படங்களில் இசையமைக்கிறார் நிவாஸ் கே பிரசன்னா.
அந்த வரிசையில், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ’புரொடக்ன் நம்பர் 4’ திரைப்படத்திற்கு அவர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான படங்களைத் தயாரித்து வரும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ஹரிஹர சுதன் அழகிரி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜென் ஸீ சென்சேஷன் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படப்புகழ் சான்வே மேக்னா கதாநாயகியாகவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி.எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.
'மாவீரன்’, ’3BHK’ போன்ற வெற்றிப்படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மூலம் தொடரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / Durai.J