Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ.கூட்டணியில், பா.ஜ. - பா.ம.க. - அ.ம.மு.க. த.மா.கா. புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி உள்ளன.
இதில், பா.ஜ.வுக்கு 27, பா.ம.க.,வுக்கு 18, அ.ம.மு.க.,வுக்கு 11 என்ற எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக, மீதமுள்ள 169 தொகுதிகளில், அ.தி.மு.க., போட்டியிடுகிறது.
தற்போது அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்த சிங்கத் தமிழர் முன்னேற்றக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் பரதன் இன்று தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு,
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் நாளை இபிஎஸ் எந்த தொகுதியை வெளியிடுகிறாரோ, அந்த தொகுதியில் சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் நின்று மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
மத்திய மண்டலத்தில் 45 தொகுதிகளை நிர்ணயிக்க கூடிய சக்தியாக சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளது என்பதை இந்த கூட்டணியில் இணைந்தது மூலம் நாம் உறுதி செய்து இருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் தொகுதியை நாம் விரும்பி கேட்டு இருக்கிறோம். இருந்தாலும் மணச்சநல்லூர் தொகுதியை கொடுத்தாலும் அதில் மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்.
இவ்வாறு பரதன் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b