மதவாத சக்திகளை தமிழகத்தில் கால் ஊன்றக் கூடாது என்ற தெளிவு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது - எம்.எல்.ஏ. எழிலன்
சென்னை, 27 மார்ச் (ஹி.ச) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. எழிலன் இன்று (27.03.2026) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர்களிடம் அவர் கூறிய
மதவாத சக்திகளை தமிழகத்தில் கால் ஊன்றக் கூடாது என்ற தெளிவு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு உள்ளது -  எம்.எல்.ஏ. எழிலன்


சென்னை, 27 மார்ச் (ஹி.ச)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்.எல்.ஏ. எழிலன் இன்று (27.03.2026) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி களம் அமைத்து இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அருமையான ஒரு சாதனை படைத்த ஒரு மாபெரும் ஆட்சியை இந்தியத் துணைக் கண்டம் மட்டுமல்லாமல் இந்த உலகமே வியக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டை சமூக பொருளாதாரத்தில் உயர்த்திருக்கிறார்.

அதற்கான பல்வேறு குறியீடுகளை நாம் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அனைத்து துறையிலும் மாபெரும் வளர்ச்சி உயர்ந்த வளர்ச்சி பரவலாக்கப்பட்ட வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாட்டைக் கல்வி மற்றும் மருத்துவ தளத்தில், தொழில் முதலீடுகள் கட்டுமானங்களில் தமிழ்நாடு வரலாற்றுக்கான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

சர்வதேச நாடுகள் கொடுக்கிற பல்வேறு ஆய்வாளர்கள் கொடுத்த ஆய்வுகளும் பல்வேறு நிருபர்கள் முக்கியமாக இந்தியத் துணைக்கண்டத்தின் பெரிய பெரிய பத்திரிகை நிருபர்கள் பல ஆய்வுகள் கொடுத்து ஒவ்வொரு மாநிலத்துக்கும் பன்முகத் தன்மையில் எந்த மாநிலம் சிறப்பாக விளங்குகிறது என்றால் அது நம்பர் ஒன் ஸ்டேட் சூப்பர் ஸ்டேட் என்று தமிழ்நாட்டைப் பெருமை சேருகிற விஷயத்தைத் திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியைச் சிறப்பு எனக் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்த வரைக்கும் சீக்கிரம் தேர்தல் வையுங்கள் வாக்கு செலுத்த நாங்கள் தயாராக உள்ளோம் எனக் கூறுகின்றனர். திராவிட மாடல் ஆட்சி 2.0 லோடிங் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டு முதல்வருக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டார்கள்.

சுமுகமாக அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாட்டு முதல்வர் அமைக்கும் வியூகத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஒவ்வொரு நாளும் கையெழுத்து இடும் விஷயங்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

கூட்டணியில் அதிருப்தி என்று சொல்கிறார்கள். ஆனால் நல்ல ஒரு பலமான கூட்டணியில் காங்கிரஸைக் கையாண்ட விதமும், தேமுதிகவை கையாண்ட விதமும், விடுதலை சிறுத்தை கட்சியை கையாண்ட விதமும், இடதுசாரி தோழர்களை கையாண்ட விதமும் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டுதான் கையெழுத்து போட்டுள்ளனர்.

அனைவரும் தெளிவாக இருக்கிறார்கள்.ஏனென்றால் இது ஒரு கொள்கை அடிப்படையில் அமைந்த கூட்டணி. பெரிய அண்ணன் மனப்பான்மை (பிக் பிரதர் ஆட்டிடியூட்) என்று சொல்கிற விஷயம் எப்படி என்று பார்த்தால் அது சகோதரர் மனப்பான்மை (பிரதர்லி ஆட்டிடியூட்) என்று சொல்லலாம். ஒரு சகோதரத்துவ உணர்வுதான் என்று சொல்லலாம்.

அந்த சகோதரத்துவ உணர்வு அடிப்படையில் மதவாத சக்திகள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் மறைமுகமாகவும் நேரடியாகவும் கால் ஊன்றக் கூடாது என்ற தெளிவு அனைத்து கூட்டணிக் கட்சிக்குத் தலைவருக்கும் இருக்கிறது.

இணைந்து வெற்றிவாகை சூடுவதற்கான தளம் அமைக்கிற விஷயங்கள் இருக்கும். ஒரு தேர்தல் அரசியல் கூட்டணி நடக்கும்போது பல வகையான விவாதங்கள் வரும். அதுவும் தான் ஜனநாயகம். ஒவ்வொருவரும் அவர்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள்.

அவர்களுடைய விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். அதனைத் தலைமை ஏற்று உள்வாங்கி அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று ஒருமித்த கருத்துடன் (Consensus Arriving Exercise) செயல்படுவது தான் கூட்டணி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b