Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி முரசொலி அறக்கட்டளை மீது சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், முரசொலி அறக்கட்டளை நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை விளம்பரம் என்ற பெயரில் முறைகேடாக செலவிட்டுள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது, முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற புகார் தொடர்பாக இந்த மனுவில் நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும், இந்த மனு அரசியல் நோக்கத்துடன் உண்மைகளை மறைத்து தாக்கல் செய்யப்பட்டதாக முரசொலி அறக்கட்டளை தரப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ