Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ஈரோடு (மேற்கு), ராணிப்பேட்டை, கிள்ளியூர் மற்றும் கும்பகோணம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை த.மா.கா.வின் தலைவர் ஜி.கே. வாசன் இன்று (27.03.2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், ராணிப்பேட்டை தொகுதியில் கார்த்திகேயன், கிள்ளியூர் தொகுதியில் நிவின் சைமன், ஈரோடு மேற்கு தொகுதியில் எம். யுவராஜா மற்றும் கும்பகோணம் தொகுதியில் அசோக் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த அறிவிப்புகளுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், வேட்பாளர் பட்டியலை நண்பகல் 12.12 மணிக்கு வெளியிடப் போவதாக் கூறினார்.
அதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம்,
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. எங்கள் கட்சிக்கு உள்ள நம்பிக்கையை நாங்கள் பின்பற்றுகிறோம். அதுமட்டுமல்ல, அது நூற்றுக்கு நூறு நல்ல நேரம் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
2019 மக்களவைத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது.
2019 மக்களவைத் தேர்தலில் நான் அதிமுக கூட்டணியில் நேரடியாகப் போட்டியிட்டேன்.
அதன் அடிப்படையில் எனக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியும் பின்னர் ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு அடுத்த இரண்டு வருடங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கூட்டணி தொடர்ந்தது.
தேர்தல் நெருங்கும்போது எங்களுக்கு கிடைக்க வேண்டிய சைக்கிள் சின்னம் இன்றைக்குப் போல அன்றைக்கும் கிடைக்கவில்லை.
அதனால், நான் அப்போது இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டேன். அதுதான் கூட்டணி நியாயமும்கூட.
அதற்குப் பிறகு எங்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார்கள்.
வழக்கு தொடர்ந்தார்கள்.
சென்ற மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் 3 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டோம்.
இந்த முறை, மீண்டும் சைக்கிள் சின்னத்தை வழங்க முடியாத சூழல் குறித்து தேர்தல் ஆணையம் கூறியது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாங்கள் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். இம்முறை சைக்கிள் சின்னம் கிடைக்காததால் நான், கூட்டணியில் இருக்கிற பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
இதுதான் உண்மை நிலை
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b