Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாள்முதல் சமூக வலைதளங்களில் தன்னை குறித்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் நடைபெற்று வருவதாகவும், மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் முன்னாள் பெண் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
த.வெ.க.வில் இருந்து வெளியேறியதற்குப் பிறகு, சிலர் நடிகர் விஜய் அவர்களின் புகைப்படத்தையும், கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து அவதூறு பதிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், த.வெ.க. குறித்து பேசினாலோ அல்லது கட்சியை விட்டு வெளியே வந்தாலோ தொடர்ந்து மிரட்டலும், அவதூறும் நடைபெறுகிறது என அவர் கூறியுள்ளார்.
“நான் த.வெ.க.வில் இருந்த போது அனைவருக்கும் அக்காவாக இருந்தேன். ஆனால் கட்சியை விட்டு வெளியே வந்த பிறகு என்னை குறிவைத்து இப்படி அவதூறு பரப்புவது வருத்தமளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அவதூறு மற்றும் மிரட்டல் சம்பவங்களுக்கு விஜய் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அவருக்கு தலைமைத் திறன் இல்லை என்பது நிரூபிக்கப்படும் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதேபோல், சமீபத்தில் வெளியான பொன்ராஜ் அறிக்கைக்கு தாம் எந்தவித ஆதரவும் அளிக்கவில்லை என்றும், அவரை ஏன் திமுகவுடன் இணைத்து பேச வேண்டும் என்பது புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதியாக, தன்னை குறிவைத்து அவதூறு மற்றும் மிரட்டல் விடுத்தவர்கள்மீதும், இதற்கு பொறுப்பேற்க வேண்டிய விஜய் அவர்கள்மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ