Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 27 மார்ச் (ஹி.ச)
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எரிபொருள் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, கொரோனா காலத்தைப் போல இந்தியாவிலும் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவி வந்தன.
இதன் விளைவாக, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சி, பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் அதிக அளவில் குவியத் தொடங்கினர். இது மக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது.
மக்களிடையே நிலவும் இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது எக்ஸ் தளத்தில் இன்று தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து,
எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,
லாக்டவுன் போடப்படும் என்று பரவும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. மத்திய அரசிடம் இது போன்ற எந்தத் திட்டமும் இல்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய சவாலான சூழலை எதிர்கொள்ள மோடி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபடாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சர்வதேசச் சூழல் குறித்து ஆலோசிக்கப் பிரதமர் மோடி இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் முக்கியக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
இதில் எரிவாயு இருப்பு, விநியோகச் சங்கிலியைச் சீராக வைத்திருப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையற்ற பீதி அடையத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b