Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து இந்தப் பேரணி புறப்பட்டது. இப்பேரணிக்கு ஹெச்.எம்.எஸ். உழைப்பாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்டத் துணை ஆட்சியர் (பயிற்சி) புவனேஸ்வராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.
ராஜாஜி பூங்காவில் தொடங்கிய இந்தப் பேரணி, பாளையங்கோட்டை சாலை, காய்கனி மார்க்கெட் மற்றும் மாநகராட்சி வழியாகச் சென்று பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.
பேரணியில் பங்கேற்றவர்கள் 100% வாக்களிப்போம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியப் பேனர்கள் மற்றும் பதாகைகளை ஏந்திச் சென்றனர். பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் ராதா ஆனந்தராஜ், இளைஞர் அணிச் செயலாளர் ஜேசுராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிர்மல், மாவட்ட இணைச் செயலாளர் சாதிக் பாஷா, மாவட்ட அமைப்பாளர் பிரம்மநாயகம் மற்றும் தொகுதிச் செயலாளர்கள் மணிகண்டன் பிரம்மசக்தி, மீரா உட்பட
500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b