Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 மார்ச் (ஹி.ச.)
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் ஏர் கண்டிஷனர் (ஏசி) பயன்பாட்டை அதிகரித்து வருகின்றனர்.
ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏசியை மீண்டும் இயக்கும்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஏசியை நிறுவும் முன், அந்த பகுதியில் மின்னழுத்த மாறுபாடுகள் உள்ளனவா என்பதை பரிசீலித்து, தேவையானால் நிலைப்படுத்தி (ஸ்டெபிலைசர்) பொருத்துவது முக்கியம்.
மேலும், அவுட்டோர் யூனிட்டை அமைப்பதற்கான சரியான இடம் உள்ளதா, அறையின் அமைப்புக்கு ஏற்ப பொருத்தும் முறை என்ன என்பதையும் தொழில்நுட்ப நிபுணர்களிடம் கேட்டறிவது அவசியம். காப்பர் குழாய் நீட்டிப்பு தேவைப்படுகிறதா என்பதையும் முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும்.
ஏசியை நீண்டகாலம் பராமரிப்பு செய்யாமல் இருப்பது, தவறான இடத்தில் நிறுவுவது, தூசி தேக்கம் போன்றவை கோளாறுகளுக்கும் விபத்துகளுக்கும் முக்கிய காரணங்களாகும்.
சில குளிரூட்டும் வாயுக்கள் எரிவாயுத் தன்மை கொண்டிருக்கக்கூடும் என்பதால், அருகிலுள்ள மின்சாதனங்களில் மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மேலும், ஏசி இயங்கும் அறையில் புகைப்பிடித்தல் அல்லது தீப்பெட்டி பயன்படுத்துதல் போன்றவை ஆபத்தை ஏற்படுத்தும்.
ஏசியின் நீண்ட ஆயுளுக்கும் பாதுகாப்பான பயன்பாட்டிற்கும் வழக்கமான பராமரிப்பு இன்றியமையாதது. இருசக்கர வாகனங்களைப் போலவே, ஏசியையும் ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இதன் மூலம் குளிரூட்டும் வாயு அளவு சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யலாம்.
நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்த ஏசியை மீண்டும் இயக்கும் முன், சில நிமிடங்கள் காலியாக ஓடவிட்டு பின்னர் அறையை மூடி பயன்படுத்துவது நல்லது.
மேலும், தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது ஏசியை இயக்குவது, அதன் செயல்திறனையும் ஆயுளையும் மேம்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM