Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 28 மார்ச் (ஹி.ச)
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வு செயல்முறையில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,
தொகுதி தேர்வு வெளிப்படைத்தன்மையோடும், விரிவான விவாதத்திற்குப் பிறகே செய்யப்பட வேண்டும் என்ற தங்களது கருத்தை கட்சியின் பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். அனைத்தும் மிக ரகசியமான முறையில் நடைபெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டுவிட்டதாகவும், ஆண்டாண்டு காலமாக உழைத்த உண்மையான தொண்டர்களின் உழைப்பை கட்சிக்காக எதுவும் செய்யாத சிலர் பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையை கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது என்றும், மாநிலத் தலைவர், சட்டமன்றக் கட்சித் தலைவர், பொறுப்பாளர்கள் மட்டும் கட்சி அல்ல; லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பும் உணர்வுமே கட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொகுதி பட்டியல் வெளியானதும் விரிவாக பேசுவதாகவும், இதே அணுகுமுறையிலேயே வேட்பாளர் தேர்வும் நடந்தால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ