Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 28 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் தேர்தல் நாளன்று பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்புகள் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான பயிற்சி வகுப்புகள் இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத், பயிற்சி அளிக்கப்படும் முறைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுறுத்தல்கள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறை, வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி படிவங்களைப் பூர்த்தி செய்தல், ஆகியவை குறித்து அலுவலர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தார்.
பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தேர்தல் பணியானது மிகவும் பொறுப்பானது என்பதால், எந்தவிதத் தவறுக்கும் இடமளிக்காத வகையில் பயிற்சியை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசுத் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b