Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
அதன்படி, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அதிகாரி அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருகிற 30ம் தேதி (நாளை) முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆகும். அரசு விடுமுறை காரணமாக, மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு வர வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சி வேட்பாளராக இருந்தால் அவரை, அவர் போட்டியிடும் தொகுதியை சேர்ந்த ஒரு வாக்காளர் முன்மொழிய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர் அல்லது சுயேச்சை வேட்பாளர் என்றால் அந்த தொகுதியை சேர்ந்த 10 வாக்காளர்கள் அவரை முன்மொழிய வேண்டும். ஒருவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடாது. டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி வேட்பாளர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்தினால் போதும்.
வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்பாளர்கள் வேட்பு மனுவினை இணையவழியில் (Suvidha Portal) பூர்த்தி செய்திடலாம்.
ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுத்தாக்கலின் போது நேரில் தாக்கல் செய்ய வேண்டும்.
அனைத்து வேட்பு மனுக்களும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மேற்குறிப்பிட்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யும் நாட்களில் நேரில் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b