Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் “மனதின் குரல்” நிகழ்ச்சியின் 132-வது அத்தியாயத்தில், சர்வதேச அளவில் தற்போது நிலவி வரும் நிலையற்ற சூழ்நிலைகள் குறித்து தெளிவாக விளக்கிக் கூறியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா காலத்தில் இந்தியா எப்படி துணிச்சலுடன் போராடியதோ அதே வலிமையுடன் தற்போதைய சர்வதேச சூழ்நிலையையும் கையாள்ந்து வருகிறது என்பதை பிரதமர் மக்களுக்கு உணர்த்தியதாக கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய போர் சூழ்நிலையில் வளைகுடா நாடுகளில் வசித்து வரும் 1 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், சர்வதேச அளவில் முக்கிய எரிசக்தி மையங்களில் ஏற்பட்ட தாக்குதல்களால் உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்த போதிலும், கடந்த பத்தாண்டுகளில் இந்தியா பிற நாடுகளுடன் வலுப்படுத்திய நல்லுறவின் காரணமாக பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பதையும் பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 140 கோடி இந்தியர்களின் நிம்மதியை குலைக்கும் வதந்திகள் மற்றும் அரசியல் பொய் பரப்புரைகளுக்கு பலியாகாமல், சவால்களை சமாளிக்க நாடு எப்போதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதையும் பிரதமர் வலியுறுத்தியதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அடுத்ததாக, இந்தியாவின் பன்முக மொழிப் பாரம்பரியத்தை பாதுகாக்க பழமையான கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் “ஞான பாரதம்” செயலியைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 70 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கும், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்ததோடு, விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ