Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 29 மார்ச் (ஹி.ச.)
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஒரு வார காலம் புனித வாரமாகக் கடைபிடிக்கப்படும் நிலையில், அதன் தொடக்க நிகழ்வான குறுத்தோலை ஞாயிறு இன்று கோவையில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.
கோவை மாநகரின் அடையாளமான டவுன்ஹால் பகுதியில் அமைந்து உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில், அதிகாலையில் திரளான இறைமக்கள் கைகளில் குறுத்தோலைகளை ஏந்தி, ஓசானா கீதங்களை இசைக்க, திருப்பாடுகளின் வாசிப்பு மற்றும் சிறப்புத் திருப்பலி, ஆயர் தலைமையில் நடைபெற்றது.
பேராலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த மாபெரும் பேரணி, முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த போது, மக்கள் தங்கள் கைகளில் இருந்த குறுத்தோலைகளை அசைத்து இயேசுவின் எருசலேம் வருகையை நினைவு கூர்ந்தனர்.
இந்த திருப்பலியின் போது அமைதி மற்றும் தியாகத்தின் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்தப் புனித வாரத்தின் தொடர்ச்சியாக பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பெருவிழா ஆகியவற்றுக்கான விரிவான ஏற்பாடுகளைத் தேவாலய நிர்வாகம் செய்து உள்ளனர்.
கோவையின் பல பகுதிகளில் இருந்தும் வந்து இருந்தவர்கள் இந்த திருநாளில் தங்களின் பாவப் பரிகாரத்திற்காகவும், உலக அமைதிக்காகவும் உருக்கமாக வேண்டிக் கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J