Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 மார்ச் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் SDPI கட்சி இடம்பெற்றுள்ளது, அக்கட்சியின் வேட்பாளர் நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ வேட்பாளர் அறிவிப்பை கட்சியின் தேசிய துணை தலைவர் தெகளான் பாகவி அறிவித்தார்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முகமது முபாரக் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் மிகச்சிறப்பான 'திராவிட மாடல்' ஆட்சியை வழங்கி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெற்றுள்ளது. நன்னிலம் தொகுதியை எஸ்டிபிஐ-க்கு ஒதுக்கியமைக்காக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநில செயற்குழுவின் முடிவின்படி, இத்தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடத் தீர்மானித்துள்ளோம்.
இந்தத் தேர்தல் என்பது மதவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையிலான போர். இது என்.டி.ஏ கூட்டணிக்கும் தமிழ்நாட்டிற்குமான தேர்தல். சிறுபான்மை மக்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் நலனை விரும்பும் அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையையும் திமுக கூட்டணி பெற்றுள்ளது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இக்கூட்டணி அமோக வெற்றி பெறும். குறிப்பாக நன்னிலம் தொகுதியில் எஸ்டிபிஐ பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
தமிழகத்திற்கான சுய பொருளாதார முன்னேற்றத்தை முதல்வர் உருவாக்கியுள்ளார். ஆனால், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடிப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இதுவரை ஒரு கேள்வி கூட எழுப்பவில்லை. முதல்வர் அமைத்துள்ள இந்த மெகா கூட்டணி இந்தியாவிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.
வரும் மார்ச் 31-ஆம் தேதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நன்னிலம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, பின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும்,என்று அவர் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் உள்ள எஸ்டிபிஐ தொண்டர்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காக அயராது உழைப்பார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ