மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நேசிக்கும் இந்த விஜய் வேண்டுமா? - தவெக தலைவர் விஜய்
சென்னை, 30 மார்ச் (ஹி.ச.) பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கொடுங்கையூரில் இன்றே பிரச்சாரத்தை துவங்கினார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, ஒரு நல்ல காரியத்தை தொடங்க
TVK-vijay-


சென்னை, 30 மார்ச் (ஹி.ச.)

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கொடுங்கையூரில் இன்றே பிரச்சாரத்தை துவங்கினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,

ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு, எங்கிருந்து தொடங்கலாம், நமக்கு பிடித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து துவங்கலாமா? இப்படி எல்லாம் நமக்கு பல விஷயம் தோன்றுமில்லையா? தமிழகமே நமக்கு பிடித்த இடம் தான். எங்கிருந்து வேண்டுமானாலும் துவங்கலாம்.

இருந்தாலும், நம் வீட்டு வாசலில் இருந்து, நம்மை பெற்ற அம்மா இருக்கும் இடத்தில் இருந்து, அவர்களின் ஆசியோடு துவங்குவதுதானே நல்லா இருக்கும். இதை எல்லாம் நினைத்து தான் நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை துவங்குகிறேன்.

வட தொகுதியில் லூர்து அன்னை சர்ச், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோவில் மற்றும் பல மசூதிகள் இருக்கும் பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை துவங்குகிறோம். உழைப்பின் வாசம் இருக்கும் பெரம்பூரில் பிரசாத்தை துவங்க வேண்டும் என்று என் மனது சொன்னது.

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப்பொருள் அதிகம் புழக்கமுள்ள தமிழகத்தை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். தமிழகத்தை இப்படியொரு நிலைமைக்கு கொண்டு வந்தது தீயசக்தி திமுக தான் காரணம். ஒன்றுக்குமே உதவாத ஆட்சியை நடத்திட்டு, விரைவில் விடைபெறப் போகும் ஸ்டாலின் சார் தான் காரணம்.

இந்த 5 ஆண்டுகளில் ஆட்சி நடத்தினார்களா? அல்லது வேறு ஏதாவது நடத்தினார்களா? சோறு தண்ணீர் கூட இல்லாமல் இருந்து விடலாம். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எப்படி இருக்க முடியும். நம் வீட்டு பெண் பிள்ளைங்க இரவில் டாய்லெட்டுக்கு கூட வெளியே போக முடியல. போயிட்டு வருவதற்குள் என்ன நடக்குமோ? என்று பயந்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஒரு பாட்டிக்கு கூட பாதுகாப்பில்லை.

டீக்கடையில் நிம்மதியா டீ கூட குடிக்க முடியலை. போதையைப் போட்டுக் கொண்டு வந்து வெட்டி விட்டு போய் விடுகிறார்கள். இது நாடா? இல்லா காடா? இங்கு ஒரு அரசு என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? 5 வருடம் போலீஸ் துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் சார், ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட கொடுக்க முடியவில்லை எனில், எதுக்கு இந்த ஆட்சி, அதிகாரம்.

இந்த தீயசக்தி திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கா? நீங்கள் நிம்மதியா இருக்கிறீர்களா? ஸ்டாலின் சார் ஆட்சியில் மக்களுக்கு முக்கியத்துவம் கிடையாது. அவருக்கு குடும்பத்தோடு சேர்ந்து கொள்ளைடிப்பது தான் முக்கியம். நான் முன்பே சொன்னதைப் போல டாஸ்மாக்கில் மட்டும் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல். இது வெளியே தெரிந்தது. தெரியாமல் எவ்வளவு இருக்கிறதோ?

அதேபோல, நகராட்சித்துறையிலும் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல். நம்ம பசங்க படித்து விட்டு வேலை தேடி எங்கெல்லாம் அலைகிறார்கள். நகராட்சித்துறையில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கான லஞ்சம் வாங்கிவிட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லாததைப் போல பண்ணிவிட்டார்கள். தம்பி, தங்கைகளே, வேலைவாய்ப்பு இல்லாத ஸ்டாலின் சார் சர்க்காரை தூக்கி வீசி எறிவோமா? உங்களுக்கு பாதுகாப்பு இல்லாத இந்த தீயசக்தி திமுக அரசை தூக்கி வீசி எறிவோமா?

வண்டி வண்டியா வைத்துள்ள பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், அதனை எல்லாருக்கும் கொடுத்து, எப்படியாவது கொடுத்து ஜெயித்துவிடலாம் என்று கனவு காண்பார்கள். நான் முன்பே சொன்னதைப் போல, அனைத்தையும் வாங்கிக்கொண்டு, அவங்க காதில் விசில் ஊதி அனுப்புங்க. எப்படி நம்மளை ஸ்மார்ட்டா ஏமாற்றி கொள்ளையடித்தார்களோ, அதேபோல, நம்மளும் திமுக அரசுக்கும் ஸ்மார்ட்டா வேட்டு வைக்கணும்.

உங்களுக்கும், இளம் தலைமுறையினருக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்று தான். ஏப்ரல், 23ம் தேதி காலையில் ஓட்டுச்சாவடி சென்று, விசில் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள். அசால்ட்டு வேண்டாம். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல். உங்களுக்கான தேர்தல். எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கையையும் உதறி தள்ளிவிட்டு, எல்லா வலிகளையும் தங்கிக் கொண்டு உங்களுக்காகத் தான் இங்கு வந்துள்ளேன்.

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா? மக்களை நேசிக்கும் இந்த விஜய் வேண்டுமா? அவ்வளவு தான் இந்தத் தேர்தலே. உங்கள் அண்ணன், தம்பி, பையனாகிய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்,

இவ்வாறு அவர் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b