Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 31 மார்ச் (ஹி.ச.)
பீகார் மாநிலம் நாலந்தாவில் உள்ள சீத்லா மாதா கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பீகார் துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து அரசு உதவிகளும் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து துணை முதல்வர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,
காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
நாலந்தா சீத்லா மாதா கோவிலில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் மிகுந்த துயரத்தை அளிக்கிறது. உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பாதிக்கப்பட்டோருக்கு அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.
காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையவும், துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு மன வலிமை கிடைக்கவும் பிரார்த்திப்பதாகவும், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என்று அவர் கூறினார்.
இன்று நடைபெற்ற வாராந்திர சந்தையின் போது, அதிக அளவில் திரண்ட கூட்டத்தினால் கோவிலில் இந்த நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பரபரப்பான சூழலில், மக்கள் பல திசைகளில் ஓடிச் சிதறிய நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த சிலர், போதுமான அளவில் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படாததே விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கோவில் வளாகம் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த சந்தைக் கடைகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / JANAKI RAM