Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 மார்ச் (ஹி.ச.)
இந்திய ரயில்வேயின் தற்போதைய டிக்கெட் ரத்து மற்றும் முன்பதிவு நடைமுறைகளில் பயணிகளுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பின் செயல் இயக்குநர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் இந்திய ரயில்வே வாரியம் அமல்படுத்தியுள்ள புதிய ரத்து விதிகளின் காரணமாக, பயணிகள் கடைசி நேரத்தில் டிக்கெட்டை ரத்து செய்யும்போது பெரும் தொகையை இழக்க வேண்டியுள்ளது.
இது சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. பயணிகளிடமிருந்து மறைமுகமாகப் பணத்தைச் சுரண்டும் இந்த நடைமுறையை ரயில்வே வாரியம் கைவிட வேண்டும்.
உறுதிப்படுத்தப்படாத காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும்போது, அதிலிருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படுவது நியாயமற்றது. சேவை வழங்கப்படாத நிலையில் பயணிகளிடமிருந்து பணம் வசூலிப்பது நுகர்வோர் உரிமைக்கு எதிரானது என எம்பவர் இந்தியா சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல், RAC (Reservation Against Cancellation) முறையில் பயணிகளிடம் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்குப் படுக்கை வசதி வழங்கப்படாமல், ஒரு இருக்கை மட்டுமே வழங்கப்படுகிறது. பயணம் முடியும் வரை இருக்கை மட்டுமே வழங்கப்படும் நிலையில், படுக்கை வசதிக்கான முழு கட்டணத்தையும் திருப்பித் தராமல் ரயில்வே தக்கவைத்துக்கொள்வது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது.
எனவே, பயணிகள் பாதிக்கப்படாத வகையில் ரத்துக் கட்டணத்தைக் குறைத்து, நியாயமான தொகையைத் திருப்பி வழங்க வேண்டும். உறுதி செய்யப்படாத டிக்கெட்டுகளுக்கு முழுத் தொகையையும் எவ்வித பிடித்தமும் இன்றி வழங்க வேண்டும். இருக்கை வசதி மட்டுமே பெறும் RAC பயணிகளுக்கு, அதற்கேற்றவாறு கட்டணத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத அவசரச் சூழ்நிலைகளில் டிக்கெட் ரத்து செய்வோருக்குச் சிறப்புச் சலுகை விதிகளைக் கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் பொதுச் சேவை அமைப்பான இந்திய ரயில்வே, அதன் கொள்கைகளை நுகர்வோர் நலன் மற்றும் நீதியை உறுதி செய்யும் வகையில் ரயில்வே வாரியம் உடனடியாகப் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டியது அவசியம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J