Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 31 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
பொதுவாக தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில், அமைச்சர் கீதா ஜீவன் இன்று அதிகாலையிலேயே தூத்துக்குடி முத்துநகர் கடற்கரைக்குச் சென்று பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
அங்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார்.
அப்போது அங்கிருந்த கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்கள் அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு உற்சாகமாகப் பேசினர்.
பல மாணவிகளும் பெண்களும் அமைச்சருடன் ஆர்வத்துடன் 'செல்பி' எடுத்துக்கொண்டதோடு, தேர்தலில் வெற்றி பெறத் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
வாக்காளர்களை மிகவும் சுறுசுறுப்பான சூழலில் சந்திக்கும் இந்த உத்தி, மக்களிடையே நேரடித் தொடர்பை ஏற்படுத்த உதவும் ஒரு சிறந்த பிரச்சார முறையாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின் போது காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி. சண்முகம், முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் நிர்மல்ராஜ், வட்டச் செயலாளர் மரிய ஆன்ஸ், கவுன்சிலர் எடின்டா, காங்கிரஸ் வட்டத் தலைவர் மோகன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b