Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 31 மார்ச் (ஹி.ச.)
தஞ்சாவூரின் எட்டுத் திசைகளிலும் சோழர்கள் அம்மன் கோவில் அமைத்து வழிபட்டனர். அதில், விஜயசோழ மன்னரால் கட்டப்பட்ட கோடியம்மன் கோவில் மிகவும் பழமையானது.
இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு கடந்த 9 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் இந்த திருவிழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான காளி புறப்பாடு, இன்று அதிகாலை நடைபெற்றது. கோடியம்மன் கோவிலில் உள்ள இரண்டு காளி உருவங்கள், திருநீறு நிரப்பிய தனித்தனி கபாலத்துடன் புறப்பட்டு, மேல ராஜவீதிக்கு வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர் மேல ராஜவீதியில் உள்ள சங்கரநாராயணன் கோவிலில் இருந்து பச்சைகாளியும், கொங்கணேஸ்வரர் கோவிலில் இருந்து பவளக்காளியும் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
வெவ்வேறு ஆலயங்களில் இருந்து பச்சைக்காளி - பவளக்காளி புறப்பாடாகி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்கள்.
வீதிகளில் உலா வந்த காளியைப் பக்தர்கள் தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி - பவளக்காளி உறவாடும் நிகழ்ச்சி நாளை நள்ளிரவு நடைபெறுகிறது.
Hindusthan Samachar / vidya.b