Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 31 மார்ச் (ஹி.ச)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் வடக்கு கோபுரம் அருகே உள்ள பாண்டியகம் கோயிலில் (சுப்ரமணியர் கோயில்) கடந்த மார்ச் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து, தினந்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (மார்ச்.31-ம் தேதி) செவ்வாய்க்கிழமை ஸ்ரீ சுப்ரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.
கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று முருகா, முருகா என முழக்கமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டனர்.
பின்னர், பங்குனி உத்திர உற்சவத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. நாளை ஏப்.1-ம் தேதி புதன்கிழமை காலை ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், பின்னர் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b