Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 31 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், புகார்களைப் பெறுதல் மற்றும் வீடியோ கண்காணிப்புப் பணிகளின் தற்போதைய நிலையை ஆட்சியர் கேட்டறிந்தார்.
கட்டுப்பாட்டு அறையில் உள்ள கணினித் திரைகள், வரைபடங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாகப் பெறப்படும் புகார்கள் பதிவு செய்யப்படும் முறையை அவர் ஆய்வு செய்தார்.
பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்றவும் அங்கிருந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b