Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மண்டல ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயிலுக்கு கர்தவ்ய த்வார் (Kartavya Dwar )என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக ஏற்கனவே பல போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், திருச்சியில் இந்திப் பெயரில் நுழைவு வாயில் திறக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!
இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!
'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.
குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.
மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!
தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b