ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை சரியும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன், 04 மார்ச் (ஹி.ச.) முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டன. ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி கட்டமைப்பு வசதிகள், ராணுவ முக்கிய இடங்கள் என பல்வேறு இல
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை சரியும் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்


வாஷிங்டன், 04 மார்ச் (ஹி.ச.)

முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 28-ம் தேதி ஈரான் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டன.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தி நிலையங்கள், அணுசக்தி கட்டமைப்பு வசதிகள், ராணுவ முக்கிய இடங்கள் என பல்வேறு இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர், ஈரான் புரட்சிகரப் படை தளபதி முகமது உட்பட முக்கியமான பலர் உயிரிழந்தனர்.

இதன் விளைவாக இஸ்ரேல் நாட்டின் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகளின் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

அதே நேரம் இஸ்ரேல் நாடும் ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த போர்ச்சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஈரானுக்கு எதிரான போர் முடிந்தவுடன் கச்சா எண்ணெய் விலை குறையும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

அமெரிக்கா ஈரானுக்கு எதிராக எடுத்த இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவில் வசிக்கும் ஈரானியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வீதிகளில் பலர் நன்றி தெரிவித்து தங்களின் ஆதரவை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதனை ஒரு சரியான நடவடிக்கையாகவே மக்கள் கருதுகிறார்கள்.

எண்ணெய் விலை தற்காலிகமாக சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்ணெய் விலை குறையும். முன்பு இருந்ததை விடவும் குறையும் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM