Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள எல்.என்.டி பைபாஸ் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் பாதையில், சாலையோர நடைபாதையின் கீழ் பகுதியில் கஞ்சா செடி ஒன்று வளர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பாதையை கடந்து சென்ற பொதுமக்கள் சிலர், செடிகளுக்கு இடையே சந்தேகப்படும்படியாக வளர்ந்திருந்த ஒரு செடியை உற்று நோக்கியபோது, அது கஞ்சா செடி என்பதை அடையாளம் கண்டனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தச் செடியை வீடியோ எடுத்த இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மருத்துவமனை வளாகத்தின் அருகிலேயே இத்தகைய தடை செய்யப்பட்ட செடி வளர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக விரோதிகள் யாரேனும் இதனைத் திட்டமிட்டு வளர்த்தார்களா அல்லது தானாகவே வளர்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, அந்தச் செடியை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
Hindusthan Samachar / Durai.J