Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 மார்ச் (ஹி.ச.)
கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன்
திருக்கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு
வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த மாதம் 17 ஆம்
தேதி பூச்சாட்டு விழாவுடன் தொடங்கியது.
தொடர்ந்து 24 ஆம் தேதி
கொடியேற்றப்பட்டு அன்று இரவு அக்னிச்சாட்டும் நடைபெற்றது.
தேர் திருவிழாவை
ஒட்டி அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று ஒவ்வொரு
நாளும் அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்மவாகனம், அன்ன வாகனம், காமதேனு
வாகனம், வெள்ளை யானை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி
உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள்
நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்ட நிலையில் விழாவின்
உச்ச நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
முன்னதாக
அம்மன் கோவிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட அருள்மிகு கோணி
அம்மன் ராஜவீதி தேர் நிலை திடலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த
திருத்தேரில் எழுந்தருளினார்.
பின்னர் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார்
சிரவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் உட்பட முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து
தேரோட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ ராஜ
வீதியில் தேர் முட்டியில் புறப்பட்ட அருள்மிகு கோபியம்மன் திருத்தேர்
ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக சென்று மீண்டும்
தேர் நில்சி திடலை சென்றடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு கோவை மாநகரம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருத்தேர் பவனி நடைபெறும் சாலைகள் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாயுடன் ஒருபுறம் கண்காணிப்பு பணியிலும்
அதேபோன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய காவல்துறை வாகனம் மூலமும் மாற்று
உடையில் காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
தேரோட்டத்தை ஒட்டி ஒப்பணக்கார வீதி வைசியாள் வீதி ராஜ வீதி உள்ளிட்ட
பகுதிகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு போக்குவரத்து மாற்றம்
செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல்
முன்பாக திரண்ட இஸ்லாமியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றுள்ள பொதுமக்கள் மற்றும்
இந்துக்களுக்கு தண்ணீர் மற்றும் பேரிச்சம்பழம் கொடுத்த மத நல்லிணக்கத்தை
வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / GOKILA arumugam