Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 04 மார்ச் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பாதுகாப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மர்ம நபர்கள் இரவு நேரத்தில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தடயங்களை அழிக்கும் நோக்கில் மிளகாய் பொடியை தூவி சென்றிருப்பது போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் நாய் படையினரின் உதவியுடன் சோதனை நடத்தினர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வங்கியின் பாதுகாப்பு அமைப்புகள், சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் தகவல் அறிந்ததும் அதிகாலையிலேயே வங்கிக்குச் சென்று குவிந்தனர்.
தங்களது நகைகள் பாதுகாப்பாக உள்ளனவா என்ற அச்சத்தில் மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
வங்கியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN