Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 மார்ச் (ஹி.ச.)
அய்யா வைகுண்டரின் 194 வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செய்துள்ளார்.
இது குறித்து சீமான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த ஐயா வைகுண்டரின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!*
முதன் முதலாக 'துவையல் விருந்து' என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார்!
'கோயிலுக்குள் நுழையாதே தீட்டு' என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்த கோயிலே எனக்கு தீட்டு என்று முழங்கி, 'கண்ணாடி முன் நின்று, உன்னை நீயே வழிபடு! நீதான் கடவுள்!' என்று தனிவழியைத் தோற்றுவித்த உண்மையான மெய்யியல் பேரறிஞர்!
பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய சொந்த நிலத்தில் தனிக் கிணறு வெட்டி, அதில் அனைத்து மக்களையும் நீர் எடுக்க அனுமதித்து, அதையே பொதுக்கிணறாக்கிய உண்மையான பொதுவுடைமைவாதி!
முழங்காலுக்குக் கீழ் வேட்டி கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தகர்க்க, அதைத் தலையில் கட்டிக்கொள்ளச் செய்து, தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திய உண்மையான சமயப்புரட்சியாளர்!
'தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்' என்று கற்பித்த உண்மையான பேரருளாளர்!
ஐயா வைகுண்டர் அவர்கள் தமிழ் மண்ணில் தோன்றியத் திருநாளில், ஐயாவின் சமத்துவ வழிப்பற்றி வணங்குவோம்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைத்து தமிழ் மக்களால் வணங்கப்பெறும்
போற்றுதற்குரிய
ஐயா வைகுண்டரின் அருட்கொடையை நினைந்து போற்றுவோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b